நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை

Mohini Actressஅல்லேலூயா.. நான் இன்று மிகவும் சந்தோசமாய் உள்ளேன்.. நிறைய மேடைகளில் ஏறி இருக்கிறேன், கேடயம் வாங்கி உள்ளேன், நல்ல பேச்சாளராக கூப்பிட்டுள்ளார்கள். ஆனால் அதை காட்டிலும் பெருமைபடுகிற விஷயம் இயேசு அப்பாவினுடைய பெண்ணாக, இயேசு அப்பாவின் அன்பிற்கு சாட்சியாய் இயேசு அப்பா உயிரோடு இருக்கிறார் என்பதற்கு நான் இங்கு சாட்சியாய் நிற்பதில் சந்தோசமாய் உள்ளது.

என்னை மோகினி என்ற ஓர் நடிகையாகத்தான் தெரியும். என்னுடைய உண்மையான பெயர் மகாலட்சுமி. நான் தஞ்சாவூர் பகுதியில் ஓர் பிராமண குடும்பத்தில் பிறந்தேன். என்னை என் பெற்றோர் ஆச்சாரமாய் வளர்த்தார்கள். எங்கள் குடும்பம் முழுவதும் கலப்பு திருமணம் இல்லாத பிராமண குடும்பம். நடிப்பதற்கு எதிர்ப்பு இருந்தாலும் நடிப்பின் மத்தியில் ஓர் பிராமண வழக்கத்தை மறக்காத பெண்ணாக பெற்றோர் வளர்த்தனர்.

எனக்கு 21 வயதில் திருமணம் நடந்தது. வீட்டில் பார்த்து 3 நாளில் முடிவு செய்து பரத் என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். ஓர் ஆண்பிள்ளையும் பிறந்தது. எந்த ஓர் குறையும் இல்லாமல் என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. என்னை பற்றி ஒரு கிசுகிசுவும் இல்லை.. கல்யாணம் முடிந்ததும் சில நாளில் அமெரிக்கா சென்றோம். சந்தோசத்திற்கு குறைவில்லாமல் வாழ்ந்து வந்தோம். எனக்கு முதுகு பகுதியில் ‘spondylosis’ என்ற ஓர் வலி திருமணத்திற்கு முன்பிருந்தே இருந்தது. இந்த வியாதி முற்றி இரண்டாம் கட்டத்திற்கு சென்றது. அப்போது எனக்கு 24 அல்லது 25 வயது இருக்கும். என் குழந்தைக்கு 1 1/2 வயது.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் என் 30 தாவது வயதில் ஓர் அறுவை சிகிச்சை செய்யவேண்டியது இருக்கும் என்றார்கள். பல கட்டுபாடுகளை விதித்தார்கள். 5 நிமிடங்கள் ஓரிடத்தில் உட்கார்ந்தால் என் கழுத்து முழுவதும் வீங்கி விடும். என் குழந்தையை கவனிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டேன். சிகிச்சைக்கு பின்பும் என் எதிர்க்காலமும் கேள்வி குறியாகி போகலாம்.

இந்த நிலையில் என் உடல் சுகவீனம் என் கணவரின் பெற்றோருக்கு கவலையை கொடுத்தது. அவர்களில் ஒரே மகன் என் கணவர். அவர்கள் என் கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுத்தனர். என் முன்பாகவே இதை என் கணவரிடம் கேட்டனர். ஆனால் என் கணவர் மறுத்து விட்டார். இந்த நிலையில் நான் இரண்டாம் முறை கருவுற்றேன். மருத்துவர்கள் என் உடல் நிலைமை நிச்சயம் தாங்காது என்று சொல்லி கருவை உள்ள குழந்தையை அழித்து விட்டனர்.

இந்த சம்பவம் என்னை மனவுளைச்சலுக்கு ஆளாக்கியது. மிகவும் சோர்ந்துபோய் விட்டேன். நான் என் உடலுக்கு மருத்துவம் பார்க்கவும் மறுத்து விட்டேன். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போது என் மனதில் ஓர் கேள்வி எழுந்தது. “உண்மையான கடவுள் இருக்காரா? இல்லையா? ஏன் நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன்?”. ஆனால் பதில்கிடைக்கவில்லை..

சிலர் நான் போன ஜென்மத்தில் செய்த பாவம் தான் என்னை வாட்டுகிறது என்றார்கள். நான் அமெரிக்காவில் நடத்தி வந்த நடன வகுப்பையும் மூட வேண்டியதாயிற்று. இந்த கர்மாவிற்கு பதிலாக இந்து மதத்திலோ, முகமதிய மதத்திலோ, புத்த மதத்திலோ, ஜைன மதத்திலோ பதில் தேடுவீர்கள் என்றால் எதிலுமே கிடையாது. எந்த ஓர் மதத்திலேயும் அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள், அந்த கோவிலுக்குள் செல்லுங்கள் என்று தான் பல கட்டளைகள் வரும். ஆனால் இதை அனைத்தையும் செய்த எனக்கு வியாதி குணமாகவில்லை.

பல இந்து மத புத்தகங்கள், இஸ்லாமியர்களின் குரான், சீக்கிய மத புத்தகம் புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ஆனால் எதிலேயும் பாவ நிவாரணத்தை பற்றி போடவில்லை. பாவத்திற்கு தண்டனை உண்டு என்று மட்டும் போடப்பட்டிருந்தது. இதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. உண்மையான கடவுள் எங்கோ இருக்கிறார். அவர் இல்லாமல் எந்த ஓர் படைப்பும் கிடையாது என்று சொல்லி இறைவனை தேடினேன். ஆனால் நீ யார்? நீ ஆம்பிளையா, பொம்பளையா என்று தெரியாது. நீர் உண்மையாய் இருந்தால் என்னை தேடி வரவேண்டும் என்று தேடினேன். மூன்று வருடம் எல்லா புத்தகங்களையும் படித்துவிட்டு “உண்மையா கடவுளே வாரும்” என்று கூறி கொண்டே தியானத்தில் இருப்பேன்.

இந்த நிலைமையில் அமெரிக்காவில் இருந்து மாற்றல் கிடைத்து இந்தியா வந்தோம். இங்கு என் வீட்டில் ‘இந்திரா’ என்ற ஓர் பெண் வேலை செய்து வந்தாள். அவள் ஓர் கிறிஸ்தவள். அவள் எப்போதும் ஓர் வேதாகமத்தை வைத்திருப்பாள். ஆனால் அவளுக்கு படிக்க தெரியாது. ஆனால் நான் எப்போதும் புத்தகம் படித்து கொண்டிருபேன்.. ஓர் நாள் என்னிடம் புத்தகம் இல்லை. கணவரும் குழந்தையும் விளையாடி கொண்டிருந்தார்கள்.

நான் இந்திராவிடம் பரிசுத்த வேதாகமத்தை கேட்டேன். பைபிள் பல கதைகளின் தொகுப்பு என்று கேள்விபட்டதுண்டு. அதனால் பைபிளை கொடு என்று அவளிடம் பைபிளை கேட்டேன். அவள் பைபிள் கதை புத்தகம் அல்ல என்றாள். அவளிடம் “உனக்கு அது பைபிள் தான் எனக்கு கொஞ்சம் கொடு படித்து தூங்கியதும் காலையில் வந்து கொடுக்கிறேன்” என்றேன்.

ஆதாம் ஏவாள் கதையில் இருந்து ஆரம்பித்தேன். கடவுளின் படைப்பு வித்தியாசமாய் இருந்தது. என் தலைக்கு அருகில் புத்தகத்தை வைத்திருந்தேன். படித்துவிட்டு தூங்கி விடேன். தூங்கும் போது ஓர் அழகிய கனவு கண்டேன். அந்த கனவு என் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றி விட்டது.

என்னுடைய தேடல் முழுவதும் கர்மாவில் இருந்து முக்தி கொடுக்க கூடிய கடவுள் எங்கே என்பது தான். வாழ்கையில் கஷ்டங்கள், வியாதிகள், மனிதனின் பாவ வாழ்க்கையை மாற்றக்கூடிய கடவுள் எங்கே இருக்கிறார். நான் கண்ட கனவில் நான் ஓர் மணல் திட்டில் நின்று கொண்டிருகிறேன். அப்போது ஓர் ஜலப்ரளயம் என்னை சுற்றிலும் மேலேறுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடுவேன் என்ற முடிவிற்கு வருகிறேன். என்னை சுற்றிலும் தண்ணீர் நிரம்பி இருந்தது. என்னருகில் யாரும் இல்லை. இந்த தண்ணீர் தான் பாவம் என்று நினைத்தேன். அது ஓர் நிலையில் மனிதனை மூடிவிடுகிறது. இந்த பாவத்தில் இருந்து என்னை யார் காப்பற்றுகிறார்களோ அவர் தான் உண்மையான கடவுள் என்று கனவில் நினைகிறேன். அப்போது எனெக்கெதிராக இன்னொருவர் மணல் திட்டின் மீது மிகவும் அழகானவராய் அமர்ந்திருக்கிறார். அவர் இருக்கும் இடமே மிகமும் பிரகசாமாய் இருந்தது. சிறிது நேரத்தில் என்னை பார்த்து கூப்பிட்டார். அதே என்னை நேரத்தில் இன்னொருவர் காட்டுவாசி போல அவரருகில் நின்று கொண்டிருக்கிறார். அவரருகில் ஓர் படகும் இருந்தது. அப்போது எனக்குள் “இவர் என்னை காப்பாற்ற போகிறாரா?” என்று யோசித்தேன். என்னை காப்பாற்றினால் இவர் தான் தெய்வம் என்று முடிவு செய்தேன். அவர் என்னை அழைத்தார். அவரருகில் செல்வதற்கு நினைக்கும் முன் என் மகன் என்னை எழுப்பி விட்டான்.

நான் எழுந்து இவர் யார் என்று யோசித்தேன். நான் இந்திராவிடம் பகிர்ந்து கொண்டேன். அவள் “அக்கா நீங்கள் இயேசுவை பார்த்திருகிறீர்கள்” என்று அழ ஆரம்பித்துவிட்டாள். நான் அவளை கிண்டல் செய்தேன். பலமுறை இயேசுவை கிண்டல் செய்ததுண்டு. “அவருக்கு அவரையே காப்பாற்ற முடியாமல் சிலுவையில் செத்துவிட்டார். அவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்?” என்று கிண்டல் செய்வதுண்டு.

நான் பலரிடமும் இதை பற்றி கேட்டேன். எல்லோரும் அது இயேசு என்று சொன்னார்கள். சரி.. இந்த இயேசு யார்? அவர் கடவுள் என்று தெரியும். அவர் யார் என்று தேட ஆரம்பித்தேன். இவர் பிறந்ததற்கு அடையாளம் உண்டா? என்று தேட ஆரம்பித்தேன். டிசம்பர் 25 எனக்கு ஓர் வேதாகமம் கிடைத்தது. படிக்க ஆரம்பித்தேன். ஓர் நாள் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் யேசுவிடம் நீர் யார் என்று கேள்வியை கேட்டேன். எப்படி கன்னி மரியாள் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்று கேள்வியை கேட்டேன்.

என் கணவரின் நண்பர் ஒருவர் மார்க் என்பவர் என்னை சென்னை எக்மோரில் உள்ள சி.எஸ்.ஐ சபைக்கு அழைத்து சென்றார். நான் இதுவரை கடவுளை பற்றி என்னென்ன கேள்வி கேட்டேனோ அத்தனை கேள்விக்கு அங்கே எனக்கு போதகரின் செய்தியில் பதில் கிடைத்தது. அந்த செய்தியில் பாவ மன்னிப்பின் அதிகாரம் யேசுவிடம் மட்டுமே உள்ளது என்று கூறியது எனக்கு பதில் கிடைத்தது போல இருந்தது.

இதன் பிறகு என் கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஆரம்பத்தது. இயேசு பாவத்தை மன்னிக்கும் போது நம் பாவங்கள், வியாதிகள், துக்கங்கள் மாறி போகும். மூன்று வாரம் கழித்து மீண்டும் அதே ஆலயத்திற்கு சென்றேன். இயேசுவை முழுவதுமாக ஏற்று கொண்டேன். ஞானஸ்நானம் எடுக்க முடிவு செய்தேன். என் பெயரை கிறிஸ்டினா என்று தேவன் வைக்க உதவி செய்தார். அதன் பிறகு என் வியாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக குணம் அடைந்தது முழுவதும் சுகம் பெற்றேன். இன்று தேவனுடைய பிள்ளையாக வாழ்ந்து வருகிறேன். ஆமென். கர்த்தர் தாமே இந்த சாட்சியை ஆசீர்வதிப்பாராக.